இந்திய அரசியலமைப்பு என்பது வெறும் சட்டவிதிகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது ஒரு நாட்டின் சுதந்திரப் போராட்டக் கனவுகளையும், லட்சியங்களையும் உள்ளடக்கிய ஒரு படைப்பு. இந்திய அரசியலமைப்பு ஆவணத்தில் முக்கியமான பங்கு வகிப்பவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவுக்குழுவின் தலைவராக, சமூக நீதியையும், சமத்துவத்தையும் சட்டத்தின் ஒவ்வொரு வரியிலும் அவர் விதைத்தார். சட்டத்தின் நுணுக்கங்களை வடிப்பதில் அவர் காட்டிய தெளிவு, இந்த ஆவணத்திற்கு ஓர் உறுதியான அடித்தளத்தை வழங்கியது. இந்த ஆவணம் கைப்பட எழுதித் தயாரிக்கப்பட்டது என்பது பலர் அறியாத ஒன்று.

அரசியலமைப்பு ஆவணம் ஒரு கையெழுத்துப் பிரதியாக இருக்க வேண்டும் என்பதில் அரசியலமைப்பு நிர்ணய சபை உறுதியாக இருந்தது. இயந்திரத்தால் அச்சிடப்பட்ட ஓர் ஆவணத்தைவிடக் கையால் எழுதுவது, தியாகத்தையும், உணர்ச்சியையும் முழுமையாக எதிரொலிக்கும் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. எனவே இது, காகிதத்தில் மையால் எழுதப்பட்ட ஒரு கலைப்படைப்பாகவே இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர்.
ஆங்கிலத்திலும், இந்தி மொழியிலும் அரசியலமைப்பின் கையெழுத்து அசல்படியை எழுத திட்டமிடப்பட்டது. ஆங்கிலத்தில் எழுத பிரேம் பெஹாரி நரேன் ராய்சாதா (Prem Behari Narain Raizada), இந்தியில் எழுத வஸந்த் கிருஷ்ணன் வைத்தியா (Vasant Krishnan Vaidya) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அக்காலத்தில் புதுடெல்லியில் இருந்த கலை வட்டாரங்களில், ராய்சாதாவின் ஆங்கில கையெழுத்து நடை மிகவும் புகழ்வாய்ந்ததாக இருந்தது. செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் மாணவராக இருந்த காலத்திலிருந்தே எழுத்துக்கலையில் சிறந்து விளங்கினார். சாய்வெழுத்து (Italic) பாணியில் அவர் காட்டிய நுணுக்கமான எழுத்துருப் புலமையை அறிந்திருந்த அரசு அதிகாரிகள், நேருவிடம் அவரைப் பரிந்துரைத்தனர்.
அரசியலமைப்பின் ஆங்கிலப்படியை எழுதுவதற்காக அவர் ஊதியம் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக, ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் தனது பெயரையும், கடைசி பக்கத்தில் தனது தாத்தாவின் பெயரையும் இடவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைத்தார். அதனை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
அதே கலைநயத்துடன் வஸந்த் கிருஷ்ணன் வைத்தியா, ராய்சாதா ஆங்கிலத்தில் எழுதிய அதே நுணுக்கத்துடன், தேவநாகரி எழுத்துருவில் இந்தி மொழியில் அசல்படியை உருவாக்கினார்.
ராய்சாதா பயன்படுத்திய ‘ஃப்ளோயிங் இட்டாலிக்’ (Flowing Italic) எழுத்துரு, ஆங்கிலப் பிரதியின் ஆன்மாவாகும். இதன் சரிவுத்தன்மை எழுத்துக்களுக்கு வேகத்தையும், கம்பீரத்தையும் தருகிறது. வார்த்தைகளுக்கு இடையே உள்ள தொடர் ஓட்டம், ஒரு நேர்த்தியான ஓட்டத்தை உருவாக்குகிறது. அரசியலமைப்பு ஆவணத்தை எழுதுவதற்காக ‘முனை எண் 303’ (No. 303) ரக பேனாமுனைகளைப் பயன்படுத்தினார். அழுத்தத்திற்கு ஏற்ப மாறுபடும் அதன் தடிமன், எழுத்துக்களுக்கு முப்பரிமாண அழகைத் தருகிறது. இதற்காக அவர் முந்நூறுக்கும் மேற்பட்ட பேனா முனைகளை மாற்றியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வரியும் நேர்த்தியாக இருக்க, காகிதத்தின் அடியில் ஒரு வழிகாட்டித் தாளை வைத்து அதன் பிம்பத்தைக் கொண்டே அவர் எழுதினார்.

இன்றைய கணினி எழுத்துருக்களில் பயன்படுத்தப்படும் எழுத்து இடைவெளிச் சீரமைப்பு (Kerning), இருபக்கச் சீரமைப்பு (Justification) போன்ற நுணுக்கங்களை, அந்தக் காலத்திலேயே ராய்சாதா தனது கைப்படச் செதுக்கினார்.
எழுத்துகளுக்கு உயிர் கொடுப்பது போல, ஆவணத்தின் பக்கங்களை அலங்கரித்தவர்கள் நந்தலால் போஸ் (Nandalal Bose) தலைமையிலான கலைஞர்கள். மொகஞ்சதாரோ முதல் நவீன இந்தியக் கலை வரை பல்வேறு காலக்கட்டங்களைச் சார்ந்த ஓவியங்கள் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலப்படியில் இருந்த அதே ஓவியங்களையும் அலங்காரங்களையும், வஸந்த் கிருஷ்ணன் வைத்தியா எழுதிய இந்திப்படியிலும் நந்தலால் போஸின் குழுவினர் இணைத்தனர்.
இப்படி ஆறு மாத பெரும் உழைப்புக்குப் பின்னர் இந்திய அரசியலமைப்பின் ஆவணம் உருவானது. 251 பக்கங்களைக் கொண்ட அதன் எடை 3.75 கிலோவாக இருந்தது
அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டு, முழுமை பெற்ற அந்த மாபெரும் கையெழுத்துப்படிகள், முதலாவதாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவரும், பின்னாளில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. நாட்டின் சார்பாக அவர் அந்த ஆவணங்களைப் பெற்றுக்கொண்டது, இந்திய மக்களாட்சியின் வரலாற்றுத் தொடக்கத்தைக் குறிக்கும் மிக முக்கியமான தருணமாக அமைந்தது.

அசல் கையெழுத்துப்படிகள், காலத்தின் மாற்றங்கள், ஈரப்பதத்தினால் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக மிகத் தீவிரமாகப் பாதுகாக்கப்படுகிறது. தற்போது அவை இந்திய நாடாளுமன்றத்தின் நூலகத்தில் உள்ளன. இவை சாதாரண அலமாரியில் இல்லை; நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட ஒரு தனித்துவமான கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளன. ஏன் இந்த முறை என்றால், சாதாரண காற்றில் உள்ள ஆக்சிஜன் காகிதத்தையும் மைகளையும் மெல்ல மெல்லப் பழுதடையச் செய்துவிடும் (Oxidation). நைட்ரஜன் வாயு நிரப்புவதன் மூலம், காகிதத்தின் தரம் மாறாமல் பல நூறு ஆண்டுகள் அதைப் பாதுகாக்க முடியும்.
ராய்சாதா, வைத்தியாவின் இந்தக் கையெழுத்துப்படிகள் ஒரு தனித்துவமான வரலாற்றுச் சான்றாக நிற்கின்றன. இவை வெறும் காகிதங்களும் மைகளும் மட்டுமல்ல. ஒவ்வொரு வரியிலும் செதுக்கப்பட்ட அந்த எழுத்துக்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களாட்சியின் வரலாற்றை பறைசாற்றிக்கொண்டே இருக்கும்.
- மு. இசக்கிமுத்து
