முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளரும் நிறுவனருமான முத்து நெடுமாறன், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உரையாற்றுகிறார்.

முத்து நெடுமாறன், தமிழ் மட்டுமன்றி, இந்திய, தென்கிழக்காசிய, தெற்காசிய மொழிகள் பலவற்றுக்கும் எழுத்துருக்களை உருவாக்கியுள்ளார். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, எழுத்துருவியல் துறையில் சிறந்து விளங்குவதோடு மேலும் பலர் இத்துறையில் வளர பயிலரங்குகளை நடத்தி ஊக்குவிக்கிறார். சரியான முறையில் எழுத்துருக்களை வடிவமைக்க உதவும் ஹைபிஸ்கஸ் செயலியை உருவாக்கியுள்ளார். பன்னாட்டுக் கணினி நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றிய முத்து நெடுமாறன், தான் மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் உலகத்தரத்தோடு இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். அண்ணா நூலகத்தில் நடைபெறும் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சியில், உலகத்தரத்தில் சிந்தித்துச் செயலாற்றுதலின் அவசியம் பற்றி ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற தலைப்பில் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள நூல் வெளியீட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி. 04-07-2026 சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வருக.
