வரலாற்றுச் சிறப்புமிக்க முரசு அஞ்சல் வெளியீட்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியாகவும் சென்னையில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியாகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது மேம்படுத்தப்பட்ட முரசு அஞ்சல் வெளியீடு . நாங்க சொன்னா சொன்னதை செய்வோம்னு சொல்வது போல ஒரு விநாடி குறைவில்லாமல் சரியாக மூன்று மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. சரியாக 5.30 மணிக்கு நிறைவு பெற்றது. அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடந்தேறியது விழா.
தொகுப்பாளர் வர்ஷா நிகழ்ச்சியைத் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கினார். பின்னர் முரசு அஞ்சல் இயலியும் வர்ஷாவுடன் இணைந்து பயனார்களை வழிநடத்தியது. மூன்று அங்கங்களாக நடந்த இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியான அறிவார்ந்த உள்ளிடு முறைகளில் முத்து நெடுமாறன் முரசு செயலி கடந்து வந்த தொழில்நுட்பங்கள் பற்றி பேசத்தொடங்கினார். அவர் சில அறிமுகங்களை வழங்கிய பிறகு பல ஆண்டுகளாக முரசு அஞ்சலைப் பயன்படுத்தும் ரஞ்சித்தும், தாரிக்கும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். தாரிக்கின் இலங்கைத் தமிழ் ரசிக்கும்படியாக இருந்தது.
இதையடுத்து மீண்டும் தன் உரையைத் தொடங்கிய முத்து நெடுமாறன், கண்ணதாசன் கவிதை எழுதும் போது எழுத்துகள் அவரை சுற்றிக்கொண்டு என்னைப் பயன்படுத்துங்கள் என்னைப் பயன்படுத்துங்கள் என மொய்க்குமாம். நம் பயனர்களும் இந்த அனுபவத்தைப் பெறவேண்டும் என்பதற்காக முரசு அஞ்சலில் சொற்கள் பரிந்துரையை மேம்படுத்தியுள்ளோம் என்று குட்டி கதையில் தொடங்கினார். தன் பயனர்களுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக விண்டோஸ், மெக் என இரண்டிலும் சரி சமமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனக்கு இரண்டும் முக்கியம் இரண்டையும் விடத் தமிழ் முக்கியம் என அங்கும் தன் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தினார்.
சொல் பரிந்துரை, பிழையான சொற்களைத் தட்டச்சு செய்யும்போது அதற்கான சரியான சொல்லை வழங்குதல், மெய் எழுத்துக்களில் மட்டுமே தட்டச்சு செய்யும் போது அதற்கான உயிர்மெய் எழுத்தோடு இணைந்த சொல்லை உருவாக்குதல், திருக்குறளின் முதல் சொல்லை தட்டச்சு செய்தால் அடுத்த சொல் தானாகப் பரிந்துரைப்பது, ஒரே சொல்லில் இருக்கும் வெவ்வேறு பொருள்களுக்கான பரிந்துரை, ஒலி மயக்கச் சொல்லுக்கான பரிந்துரை எல்லாவற்றையும் தேடித் தேடி சேர்த்துள்ளேன் என அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் அதீத அமைதி நிலவியது. கைதட்டி வரவேற்கவில்லையே என வேடிக்கையாக முத்து நெடுமாறன் கேட்க, நாங்கள் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம் அதனால் கை தட்டவும் மறந்துவிட்டோம் எனப் பதில் வந்தது கூட்டத்தில் இருந்து.
ஒரு சொல்லின் பொருள் புரியவில்லை எனில் அதற்குக் கவலை வேண்டாம் நாங்கள் இதில் பால்ஸ் அகராதி, சொற்குவை, விக்கிபீடியா, முரசு அஞ்சலுக்கான தனிப்பட்ட அகராதி என அனைத்தையும் சேர்த்துள்ளோம். நீங்கள் உங்களிடம் உள்ள அகராதியையும் இதில் இணைத்துக்கொள்ளலாம் எனக் கூறி அதற்கான செயல் விளக்கத்தைக் கொடுத்தார். அப்போது தமிழ் சொற்களை மட்டுமே முரசு அஞ்சல் எடுத்துக்கொண்டது. சுவையான கதையுடன் அதற்கு ஒரு விளக்கம் அளித்தார். நான் பல நிகழ்ச்சிகளுக்குப் பல புதிய செயலி அறிமுக விழாவிற்குச் செல்வேன் அங்குப் புதிதாக என்ன இருக்கிறது என்பதை மட்டும் பார்க்காமல் அதில் தமிழ் உள்ளதா எனத் தேடுவேன், தமிழ் இல்லையென்றால் அதை உருவாக்கியவரிடமே நேராகச் சென்று கேட்பேன், நாங்கள் தமிழை ஆதரிக்கவில்லை எனச் சொல்வார்கள் ஆனால் நான் இங்கு சொல்கிறேன் நாங்கள் தமிழை மட்டுமே ஆதரிப்போம் அதனால் தமிழ் சொற்களை மட்டுமே அகராதியிலிருந்து முரசு அஞ்சல் எடுத்துக்கொள்ளும் எனக் கூறி முடிக்கும் முன்னரே கூட்டத்தில் பெருமை நிறைந்த கைத்தட்டல் ஒலி அதிர்ந்தது.
இடையில் பயனர் ஒருவரின் திறன் பேசியில் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற பாடல் ஒலிக்க அவருக்கு நன்றி கூறியபடி தன் உரையைத் தொடர்ந்தார் முத்து நெடுமாறன். உங்களுக்கு ஒரு சொல் பிடிக்கவில்லை அல்லது நீங்கள் அதைப் பயன்படுத்த நினைக்கவில்லை என்றால் அந்த சொல்லை தடுத்து வைக்கும் வசதி இருக்கிறது என்றார். அதற்குப் பிறகு எந்த வடிவில் முரசு அஞ்சல் அந்த சொல்லைப் பெற்றாலும் அதை உங்களுக்குப் பரிந்துரைக்காது என தன் உரையை முடித்தார்.
பிறகு வர்ஷா அடுத்த அங்கத்திற்கான அறிமுகத்தைக் கொடுக்க சில நிமிட இடைவெளியில் மீண்டும் இணைந்துகொண்டார் முத்து நெடுமாறன். இந்த பகுதி மிகுந்த நகைச்சுவையாகவும் களிநயமாகவும் கடந்தது. அழகிய எழுத்துரு பகுதியில் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு உருவாக்கிய 27 எழுத்துருக்களை மேம்படுத்தியுள்ளோம். அனைத்து புதுப்பிக்கப்பட்ட எழுத்துருக்களிலும் நியூ என இருக்கும். பழைய திரைப்படத்தில் கிடைத்த ஓர் எழுத்துருவால் ஈர்க்கப்பட்டு அதில் என்னால் முடிந்த மாற்றங்களை செய்தேன். அந்த திரைப்படம் ஞான சுந்தரி இதன் பொருள் அறிவழகி அதனால் என் எழுத்துருவுக்கு அறிவு எனப் பெயர் வைத்துள்ளேன்.
அரவிந்தர் சொல்கிறார் என்ற நூலின் எழுத்துருவில் ஈர்க்கப்பட்டு அதன் மூலம் நான் உருவாக்கிய எழுத்துரு தடாகம். சீன தூரிகைகளால் தமிழ் எழுத்துகளை எழுத முயன்று அப்படி நான் வெற்றியடைந்த எழுத்துரு கீற்று, என்னுடைய கையெழுத்தை எழுத்துருவாக்கி அப்படி உருவாக்கச் சொன்ன ஆ சோதிநாதன் ஐயாவின் பெயரை நினைவூட்டும்படி சுடர் எனப் பெயரிட்டேன். குழந்தைகளுக்காக அவர்களின் கையெழுத்து பயிற்சிக்காக ஒரே கோட்டில் உருவாக்கிய எழுத்துருக்களுக்கு மேல் புள்ளி வரும் படி செய்து அதை அஞ்சல் புள்ளிகளாக்கினேன்.
குழந்தைகளுக்கு விளையாட்டு துள்ளல் இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் ஆம்பல். பல கூர்முனைகளுடன் உருவாக்கப்பட்ட செல்வம் எழுத்துருவை நீக்க முடிவு செய்தேன் ஆனால் பலரும் அதைப் பயன்படுத்துவதாகக் கேள்விப்பட்ட பிறகு அதில் மாற்றங்கள் செய்து செல்வம் எழுத்துரு உருவாக்கினேன். கொக்கிகளை எரியவிட்டு மற்ற எழுத்துகளை அமைதியாக்கி உருவாக்கிய எழுத்துரு மலையார். என் அம்மா இறந்த வருடம் ஓர் எழுத்துரு உருவாக்கினேன். அதில் சோகம் இருப்பதாகப் பலர் சொன்னார்கள் அப்போதுதான் நம் உணர்ச்சிகள் எழுத்துகளில் வெளிப்படுவதை உணர்ந்தேன் அதனால் அதற்கு அம்மா என்றே பெயரிட்டேன்.
என் எழுத்துருக்களுக்கு எப்போதும் தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் என்னிடம் உண்டு இதனால் ஒருவரின் பெயரை மட்டும் நீண்ட காலமாகப் பயன்படுத்தவில்லை ஆனால் பாஸ் பெயரையே பயன்படுத்தாமல் இருக்கலாமா எனத் தோன்றி என் கொள்கைகளை ஒதுக்கிவைத்து விட்டு மனைவி பெயரான பவானியை புதிதாக வடிவமைத்துள்ள எழுத்துக்கு வைத்துள்ளேன் என்றார். அப்படிக் கூறும்போதே கூட்டத்தில் ஒருவர் சோறு முக்கியம்ல எனச் சொல்ல மீண்டும் சிரிப்பலையில் நனைந்தது அரங்கம்.
இவ்வாறு தான் உருவாக்கிய எழுத்துருக்கள் பற்றி சிறு சிறு கதைகளுடன் மிகவும் களிநயமாக பேசினார். முரசு அஞ்சல் விலை பற்றி விவரித்தார் முத்து நெடுமாறன், பின்னர் இயலி செயலியை அதிகமாகப் பயன்படுத்திய முனீஸ்வரன், சிலம்பரசன், மகேந்திரன் ஆகியோருக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து முத்து நெடுமாறனின் வாழ்க்கையை சொல்லும் உரு நூல் வெளியீட்டு விழா தொடங்கியது அதில் தொழில்நுட்ப வல்லுநர் தி.ந.ச. வெங்கடரங்கன், காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் அறிமுக உரையாற்ற, இறுதியாக நூலாசிரியர் கோகிலா ஏற்புரை வழங்கினார்.
தொடர்ந்து காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் உரு நூலின் முதல் படியை வழங்கத் தொழில்நுட்ப வல்லுநர் தி.ந.ச. வெங்கடரங்கன் பெற்றுக்கொண்டார். இப்படியாக இனிதே நிறைவேறியது முரசு அஞ்சல் மறு உருவாக்கம், உரு நூல் வெளியீட்டு விழா.
- சத்யா கோபாலன்





















