முரசு அஞ்சல் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வெகு விமரிசையாக நடந்து முடிந்திருக்கிறது. ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு முரசு அஞ்சலின் புதிய அம்சங்கள் ஒவ்வொன்றும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. பலர் எதிர்பார்த்திராத பல்வேறு புதிய அம்சங்களோடு மீட்டுருவாக்கம் அடைந்திருக்கிறது இச்செயலி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் அந்தச் செய்தி சேரவேண்டும் அல்லவா, அதற்காகத்தான் இந்த வழிகாட்டும் கட்டுரை.

எழுத்து நடைக்கேற்ற சொல் பரிந்துரை, தனிநபர் சொற்பட்டியல், தனிநபர் அகராதி, முரசு அஞ்சலில் சொல்வன் என முரசு அஞ்சல் அறிவார்ந்த உள்ளிடுமுறையின் புதிய அம்சங்களின் வரிசை நீள்கிறது. சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.
முதல் அம்சம் தட்டச்சு செய்யும்போது, சொற்களைப் பரிந்துரை செய்யும் அம்சம். நன்றாகத் தமிழ் எழுதத் தெரிந்தோர், பிழையுடன் எழுதுவோர் என இரு தரப்புக்குமே பயனுள்ளது. இதனை வெறும் சொற்பரிந்துரை என்று நினைத்துவிடாதீர்கள், உங்களுக்கு ஓரளவிற்கு தமிழ் தெரிந்திருந்தாலும், அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் ஓர் ஆசிரியராகவே இருக்கிறது சொற்பரிந்துரை. ஆனால் அந்த ஆசிரியருக்கே பயிற்சிகொடுக்கப்போவது நீங்கள்தான்.
அதாவது நீங்கள் தட்டச்சு செய்வதை வைத்து, எழுதும் தொனியைப் புரிந்துகொண்டு அதன்படி உங்களுக்கான சொற்களைப் பரிந்துரை செய்கிறார் இந்த ஆசிரியர். நீங்கள் அடிக்கடி என்னென்ன சொற்றொடரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை கவனித்து, அந்த சொற்றொடரை மீண்டும் பயன்படுத்தும்போது, பழைய சொற்களை மீண்டும் பரிந்துரை செய்கிறது. நீங்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் புதுப்புது சொற்களை சேர்த்து, தனி அகராதியையே பராமரிக்கிறது.
அடிக்கடி பயன்படுத்தும் சொற்களை முரசு அஞ்சல் படித்துக்கொள்ளும். அடுத்த முறை நீங்கள் தட்டச்சு செய்யும்போது அதற்கேற்ற சொற்கள் உங்களுக்கான பரிந்துரை பட்டியலில் வரும். எடுத்துக்காட்டாக நீங்கள் நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, மலேசியா மெயின் ரோடு, மலேசியா என்ற முகவரியை சிலமுறை தட்டச்சு செய்திருக்கிறீர்கள். மீண்டும் இப்போது செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நம்பர் 6 என தட்டச்சு செய்தாலே விவேகானந்தர் உங்கள் கண் முன்னே பரிந்துரையாக வந்துவிடுவார். அவ்வளவுதான் மலேசியா குறுக்கு சந்து, மலேசியா மெயின் ரோடு எல்லாம் பின்தொடர்ந்து வந்துவிடும். இது சில செயலிகளில் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். அங்கேதான் முரசு அஞ்சல் மற்றொரு புதுமையைப் புகுத்துகிறது. பலருக்கு, இவரைப் போல நம்மால் எழுத முடியவில்லையே, இவர் பயன்படுத்தும் சொற்களை பயன்படுத்தி நம்மால் எழுத முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். இந்த அம்சம் அந்த கனவையுமே எளிமையாக நிறைவேற்றிவிடுகிறது. நீங்கள் எழுத விரும்பும் நபருடைய எழுத்து மாதிரியை முரசு அஞ்சலில் அதைச் சேர்க்கலாம். அதில் உள்ள எழுத்துநடையையும் சொற்களையும் படித்துக் கொண்டு அதே மாதிரி எழுதப் பரிந்துரைகள் கொடுக்கும்.
அவ்வாறு பரிந்துரைக்கும் சொற்களைப் பயன்படுத்துவதிலும் நிறைய அம்சங்கள் உள்ளன. உதாரணமாக அன்புள்ள என்ற வார்த்தையை நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அன்புள்ள என்ற சொல்லில், அன் என்பதைத் தட்டச்சு செய்வதற்குள்ளாகவே நீண்ட பரிந்துரை சொற்கள், அதன் கீழே வந்துவிடும். ஒவ்வொரு சொல்லுக்கும் அருகில் வரிசை எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் சொல்லின் வரிசை எண்ணை அழுத்தினாலே அந்த சொல் தட்டச்சாகிவிடும். இப்போது தட்டச்சு செய்திருக்கும் அன்புள்ள என்ற சொல்லை, முரசு அஞ்சல் உங்களிடமிருந்து புதிதாகக் கற்றிருந்தால், அந்த சொல் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். இந்த பரிந்துரையில் சொற்கள் மட்டும் வருவதில்லை, தட்டச்சு செய்த சொற்களுக்கு ஏற்ற உணர்ச்சிக்குறிகளும் வருகின்றன. எடுத்துக்காட்டாக வணக்கம் எனத் தட்டச்சு செய்தால், இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லும் உணர்ச்சிக்குறி தோன்றும்.
இந்த பரிந்துரை சொற்கள் தட்டச்சு செய்வதற்கு எளிமையாக இருக்கும் வகையில், பொதுவாக கிடைமட்டமாகத்தான் வரும். உங்களுக்கு அதில் விருப்பம் இல்லை எனில், செங்குத்தாகத் தோன்றும் வகையில் மாற்றிக்கொள்ளலாம். உங்களிடமிருந்து கற்றுக்கொண்ட சொற்களைப் பரிந்துரை செய்யும் அம்சம் வேண்டாம் என்றால் கூட அணைத்து வைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தாலும் முரசு அஞ்சலில் ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் சொற்கள், பணியை எளிமையாக்கப் பரிந்துரையாக காண்பிக்கப்படும்.
இதோடு தமிழி – தமிழ் பிராமி – எழுத்துருவில் எழுதும் அம்சமும் இருக்கிறது. பழங்காலத்தில் பயன்படுத்திய எழுத்துரு, இப்போது எப்படி எழுத முடியும் என்று அச்சப்பட வேண்டாம். நீங்கள் சாதாரணமாகத் தட்டச்சு செய்தாலே அது தமிழி எழுத்துருவிற்கு மாறிவிடும். அதாவது அம்மா என்பதைத் தமிழில் தட்டச்சு செய்தால், தமிழி எழுத்துருவில் அது எப்படி இருக்குமோ அவ்வாறு தானாக மாறிவிடும்.
அடுத்து திருவள்ளுவர் தந்த அருட்கொடையாம் திருக்குறளை எளிதாகத் தட்டச்சு செய்துகொள்ளும் அம்சம் இருக்கிறது. ஒரு திருக்குறளின் முதல் சொல்லை மட்டும் தட்டச்சு செய்தால், அடுத்தடுத்த சொற்கள் பரிந்துரையில் காண்பிக்கப்படும். இதே போல பழமொழிகள், சொலவடைகளைக் கூடப் பரிந்துரை செய்யும். அதோடு சொற்களின் பொருளை அறிந்துகொள்வதற்காக பல்வேறு அகராதிகளும் இதில் உள்ளன. நீங்கள் தேட விரும்பும் சொல் பற்றிய விக்கிபீடியா கட்டுரையைக் கூட அதில் படித்துக் கொள்ளலாம். தட்டச்சு செய்ததை வாசித்துக் காட்ட விரும்புபவர்களுக்கு சொல்வன் என்ற வாசிப்பான் செல்லினத்தில் இருப்பது நாம் அறிந்ததே. தற்போது கணினியில் செயல்படும் முரசு அஞ்சலிலும் சொல்வன் சேர்க்கப்பட்டுள்ளது.
அதோடு முக்கியமான இணைப்பாக, புதிய விசைப்பலகைகளாக பாமினி, தமிழ்நாட்டுத் தட்டச்சு பலகை போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன. இது போலவே இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றன.
வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற பயனர்கள் அனைவருக்கும் விளக்கக்காட்சியில் இன்னும் பல அம்சங்கள் காண்பிக்கப்பட்டன. ஜூலை 12 அன்று சென்னையில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்குகொள்ள பதிவு செய்யும் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. புதிய முரசு அஞ்சலில் உங்களுக்காக எண்ணற்ற அம்சங்கள் காத்திருக்கின்றன.
- மு. இசக்கிமுத்து
முரசு அஞ்சல் வெளியீடு முன்பதிவு
