மெட்டா நிறுவனம் பழைய ரக ஆண்டிராய்டு, ஐஓஎஸ் திறன்பேசிகளில் தங்கள் வாட்சாப் செயலியின் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. வாட்சாப் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் பயனர்களின் தேவைக்கேற்ப கொண்டுவரப்படுகின்றன. இனி வரும்காலம் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்தே அமைய உள்ளதாகக் கருதப்படுகிறது. அதற்காக தங்கள் வாட்சப் செயலியை மேம்படுத்தும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த புதிய மாற்றங்களைப் பழைய ரக ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் திறன்பேசிகளில் கொண்டு வருவது முடியாத ஒன்று. எனவே பழைய திறன்பேசிகளில் தங்கள் வாட்சாப் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் முதற்கட்டமாக 1, ஜனவரி 2025 முதல், ஆண்டிராய்டு 4.4 ரக திறன்பேசிகளில் வாட்சாப் சேவையை நிறுத்தியுள்ளது.
அடுத்த கட்டமாக மே மாதம் 5ஆம் தேதி முதல் ஐஓஎஸ் 15.1 மற்றும் அதற்கு முன்புள்ள திறன்பேசிகளுக்கும் சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட திறன்பேசிகளில் ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகியவை அடங்கும். இந்த சேவை நிறுத்தத்தின்போது வாட்சாப் செயலி தானாகவே உங்கள் திறன்பேசியிலிருந்து நீக்கப்படும். எனவே உங்கள் தரவுகளைப் பத்திரமாக நகலெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உடனடியாக புதிய ரக ஆண்டிராய்டு அல்லது ஐஓஎஸ் இயங்குதள திறன்பேசிக்கு மாறிக்கொள்ளுங்கள்.
இதே நேரத்தில் வாட்சாப் செயலிபற்றிய இன்னொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. வாட்சாப் பணப் பரிவர்த்தனை விதிகளுக்களுக்கான வரம்புகளை நீக்கியுள்ளது இந்திய அரசாங்கம். இந்தியாவில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமான யூபிஐ பணப் பரிவர்த்தனைகள் கூகுள்பே, போன்பே செயலிகள் மூலம் நடைபெறுகின்றன.
இவ்வணிகத்தில் தானும் பங்கு வகிப்பதற்காகக் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வாட்சாப் பணப் பரிவர்த்தனை அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதில் முதற்கட்டமாக இந்திய அரசாங்கத்தால் நான்கு கோடி பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அது பத்து கோடி பயனர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்தியத் தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (NPCI), வாட்சாப் அதன் அனைத்து பயனர்களுக்கும் இந்த சேவையை வழங்கலாம் என அனுமதியளித்துள்ளது. இந்த முடிவிற்கு மெட்டா நிறுவனம் வரவேற்பைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஐம்பது கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்சாப் செயலியைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
- மு. இசக்கிமுத்து.
