இணையப் போலிகள்

இணையத்தில் போலிகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில் மிகச் சில தற்காப்பு வழிகளையேனும் தெரிந்து கொள்ளும் தேவை உள்ளது.

phishing

உலக அளவில் இணையதளங்களின் நுகர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. 1996-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் வெறும் 0.85% மக்களே இணையத்தைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் 2024-ம் ஆண்டு கணக்கின்படி 68% மக்கள் இணையப் பயன்பாடு இருக்கிறது. இந்தப் பெரும் வளர்ச்சி, போலிகளின் கூடாரத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதில் ஆச்சரியமில்லை. 

பிஷிங் (Phishing) என்பது நம்பகமான நிறுவனம் அல்லது நபரைப் போலவே போலி கணக்குகள் உருவாக்கி, மோசடியில் ஈடுபடுவதாகும். போலி மின்னஞ்சல், செய்திகளைத் தூண்டில் போல் போட்டு, ஆசைகாட்டி நம்மைச் சிக்க வைப்பதால் இப்பெயர் வந்தது. சமூக வலைதளங்களில் நமக்குத் தெரிந்தவர் பெயரிலோ, நமது பெயரிலோ கணக்கு தொடங்கி, பணப் பறிப்பில் ஈடுபடுவது பற்றி நாம் அறிவோம். அதுவும் இணையப் போலி மோசடிகளின் ஒரு வகையே. இந்தியாவில் அன்றாடம் நம் தொலைப்பேசி அழைப்பின்போது ஒலிக்கும் அறிவிப்புகூட இத்தகைய போலிகளைப் பற்றிய எச்சரிக்கைச் செய்திதான். தொடக்க காலத்திலிருந்தே மின்னஞ்சல் மூலம் நுழையும் இணையப் போலிகள், தற்போது மிகத் தெளிவாகவும், மிகுதியாகவும் வளர்ந்திருக்கின்றன. 

முன்னர் எழுத்துப் பிழைகளுடன் வரும் மின்னஞ்சல்களைப் பார்த்தாலே நமக்குச் சந்தேகம் எழும். அலுவல் ரீதியான மின்னஞ்சல் இப்படித் தப்பும் தவறுமாக இருக்காதே எனத் தோன்றினாலே நாம் மோசடியில் இருந்து தப்பிக்க வழி இருந்தது. தற்காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் மின்னஞ்சல்கள் அசலைப் போலவே அலுவல் ரீதியிலான சொற்களைப் பயன்படுத்திப் பிழைகள் இன்றி வருகிறன்றன. இதில் போலிகள் வந்தால் கண்டறிவது கடினமாக இருக்கிறது.

எழுத்துப் பிழைகள் இன்றி வரும் போலிகளைக் கண்டறிய நமக்கு வரும் மின்னஞ்சல்களை தொடர்ந்து கண்காணிக்கும் பழக்கம் முக்கியமானது. எதிர்பாராத நிறுவனங்களிலிருந்து வரும் விளம்பர மின்னஞ்சல்களை சந்தேகத்துடன் அணுகுதல் வேண்டும்.

கடவுச் சொல், கடன் அட்டை விவரங்களைக் கோரும் மின்னஞ்சல்களைத் தவிர்த்தல் நல்லது. நம்பகத்தன்மை அற்ற இணையதள முகவரிக்குள் நுழையாமல் இருந்தால் போலிகளின் மோசடிகளைத் தவிர்க்கலாம். 

மின்னஞ்சல் அல்லது செய்தி மூலம் வரும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் முன், அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்யுங்கள். இரண்டு நிலை அங்கீகாரத்தை (Two-Factor Authentication) செயல்படுத்துதல் கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

மின்னஞ்சல் அனுப்புநர் முகவரி உண்மையான நிறுவனத்தின் முகவரியுடன் பொருந்துகிறதா என்பதை சரிபார்க்கவும். வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்தி, அவற்றை முறையாக நிர்வகிக்கவும். இவற்றின் மூலம் போலி மோசடிகளிடமிருந்து தப்பிக்கலாம். கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றுவதும் சிறப்பானது.

போலிகளின் மோசடியில் சிக்கியிருப்பது உங்களுக்குத் தெரிந்தால், வேறு யோசனையே வேண்டாம், உடனடியாக கடவுச்சொற்களை மாற்றிவிடுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள். ஆப்பிள் போன்ற சில நிறுவனங்கள் தனித்துவமாக இதற்கென்றே புகார் பெட்டிகளைக் கொண்டுள்ளன. இவற்றில் புகாரளிக்கலாம்.

  • விவேக்பாரதி
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now