சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓப்பன்ஏஐ நிறுவனம், உலகின் மிகப்பெரிய மின்னணுப்பொருள் உற்பத்தியாளரான தைவானின் பாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தரவு மைய வன்பொருள்களை வடிவமைத்து தயாரிக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஓப்பன்ஏஐ, பாக்ஸ்கானுடன் இணைந்து பல தலைமுறை செயற்கை நுண்ணறிவு தரவு மைய அடுக்குகளை ஒரே நேரத்தில் வடிவமைத்து உருவாக்கும். விரைவாக மாறிவரும் செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகளின் தேவைகளுக்கு ஏற்ப வன்பொருளை உருவாக்குவதே இதன் நோக்கம். கம்பிகள், இணையக் கருவிகள், குளிரூட்டல் அமைப்புகள், மின் சக்தி அமைப்புகள் உள்ளிட்டவை பாக்ஸ்கானின் அமெரிக்க ஆலைகளில் தயாரிக்கப்படும்.
முதல் கட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாங்குதல் உறுதிமொழிகள் அல்லது நிதிக் கடமைகள் இல்லை. ஆனால் ஓப்பன்ஏஐ இந்த அமைப்புகளை ஆரம்பகட்டத்திலேயே மதிப்பீடு செய்யும் வாய்ப்பும், அவற்றை வாங்கும் விருப்பமும் பெறும். அமெரிக்காவின் பல மாநிலங்களில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆலைகள் உள்ளன.
ஓப்பன்ஏஐ தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், “முன்னேறிய செயற்கை நுண்ணறிவுக்குப் பின்னால் உள்ள உட்கட்டமைப்பு அமெரிக்காவை மீண்டும் தொழில்துறை வலிமையாக உள்ள நாடாக மாற்ற ஒரு தலைமுறை வாய்ப்பு” என்றார். செயற்கை நுண்ணறிவு காலத்தின் முக்கியமான தொழில்நுட்பங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கை இது என்றும் குறிப்பிட்டார்.

