தைவானில் நடைபெற்ற உலக ரோபோ விளையாட்டுப் போட்டி 2025 (World Robot Games – WRG)-ல் மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை தைபேயில் நடந்த இந்தப் போட்டியில், சிஸ்கோர் அகாடமி (Syscore Academy) வழிகாட்டுதலின் கீழ் 24 மாணவர்கள் பங்கேற்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், தைவான், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், மலேசிய மாணவர்கள் ஒன்பது முக்கியமான பிரிவுகளில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஜூனியர் சுமோ, ட்ரோன் கால்பந்து பிரிவுகளில் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.
பினாங்கு மாநில வீட்டுவசதி, சுற்றுச்சூழல் குழு தலைவர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தனது முகநூல் பதிவில், “பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் நமது மாணவர்களை வரவேற்றேன். ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். இது அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பை உணர்த்துகிறது” என்று பெருமையுடன் தெரிவித்தார்.
பயிற்சியாளர் கூறுகையில், “இந்த மாணவர்கள் வெறும் ரோபோக்களை உருவாக்கவில்லை. அவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம், தைரியத்தையும் வளர்த்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு பதக்கமும் பலமணிநேர பயிற்சியின் விளைவாகும்” என்றார். மாணவர்கள் மாதக்கணக்கில் தயாரிப்பு செய்து, ஒழுக்கம், குழுப்பணி, தொழில்நுட்ப திறன்களைக் கற்றுக்கொண்டுள்ளனர்.
ஆறு பதக்கங்களை வென்றுள்ள பதிமூன்று வயது மாணவர் சச்சின் தன்னுடைய ஐந்து வயதில் இருந்து ரோபாட்டிக்ஸ் துறையில் ஆர்வம் காட்டிப் பயின்று வருவதாகத் தெரிவித்தார். “சவாலானதாக இருந்தாலும் இத்துறையில் கற்றுக்கொள்வது மகிழ்ச்சியான பயணமாகவே இருந்துள்ளது. ஒரே ஒரு தீர்வு மட்டுமே கிடையாது என்பதை உணர்ந்து வேலை செய்யும்போது நிரலாக்கும் திறனும் தொழில்நுட்பத் திறனும் மேம்படுகிறது” என்றும் தெரிவித்தார்.
பினாங்கு தமிழ்ப் பள்ளிகள் சிறப்புக் குழுவின் தலைவராகவும் உள்ள தத்தோ டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ, “தமிழ்க் கல்வியின் தரத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவது எனது பொறுப்பு. STEM, உலகளாவிய தொழில்நுட்பத்துக்கான அணுகலை விரிவுபடுத்த வேண்டும். நமது குழந்தைகள் பெரிய கனவுகள் காணத் துணிந்தால், நமது நாடு முன்னேறும்” என்றார்.
