ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் (Apple Intelligence) செயற்கை நுண்ணறிவு அமைப்பிற்காக பதிப்புரிமை பெற்ற புத்தகங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இரண்டு எழுத்தாளர்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கிரேடி ஹென்ட்ரிக்ஸ், ஜெனிஃபர் ராபர்சன் ஆகிய எழுத்தாளர்கள் வட கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனம் “புக்ஸ்3” (Books3) எனப்படும் தரவுத்தொகுப்பை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த தரவுத்தொகுப்பு பைபிளியோடிக் (Bibliotik) எனப்படும் நிழல் நூலக இணையதளத்திலிருந்து வந்த ஆயிரக்கணக்கான கொள்ளை அடிக்கப்பட்ட புத்தகங்களின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆப்பிள் தனது ஓப்பன்இஎல்எம் (OpenELM) மொழி மாதிரிகளை பயிற்றுவிக்க இதைப் பயன்படுத்தியதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள் ஆப்பிள் நிறுவனம் “ஒப்புதல், கிரெடிட் அல்லது இழப்பீடு இல்லாமல்” பதிப்புரிமைப் பெற்ற படைப்புகளை நகலெடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். வழக்கில் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் மற்றும் பிற மொழி மாதிரிகளை அழிக்க வேண்டுமென்றும், சட்டரீதியான இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆன்த்ரோபிக் இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு எழுத்தாளர்களுக்கு 1.5 பில்லியன் டாலர் செலுத்த ஒப்புக்கொண்டு வழக்கை தீர்த்துக் கொண்டது. ஆப்பிள் நிறுவனம் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
