சாம்சங் நிறுவனத்தின் புதிய மூன்று மடிப்பு திறன்பேசி கேலக்ஸி Z ட்ரைஃபோல்டு (Galaxy Z TriFold) எவ்வாறு மடிந்து விரிவடையும் என்பதைக் காட்டும் புதிய நகரும் படம் கசிந்துள்ளது. செப்டம்பர் 29, 2025 அன்று தென்கொரியாவில் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் இந்த அதிநவீன கருவி அறிமுகமாகலாம் என்று நம்பகமான தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கசிந்துள்ள நகரும் படம், கேலக்ஸி Z ட்ரைஃபோல்டின் மடிப்பு முறையை தெளிவாக விளக்குகிறது. திரையின் இருபுறமும் இருந்து ஒரு பேனல் வீதம் வெளியே விரிவடையும். மூடும்போது வலது பேனல் உள்ளே மடிந்து, அதன் மேல் இடது பேனல் மடியும். 11-இன்ச் OLED திரை, ஸ்னாப்டிராகன் 8 எலைட் செயலி மற்றும் 5700mAh மின்கலன் ஆகியவை இந்த கருவியின் முக்கியமான அம்சங்களாகும்.
வயர்லெஸ் மின்கலமேற்றம், பல பணிகளை ஒரே நேரத்தில் கையாளுதல் மற்றும் பயனர் இடைமுக அம்சங்கள் ஆகியவையும் இதில் உள்ளனவாம்.
கசிந்துள்ள நகரும் படம், இந்த கருவியின் முதன்மை பின்புற படக்கருவி அமைப்பைப் பயன்படுத்தி உயர்தர தற்படங்கள் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்துகிறது. கேலக்ஸி Z ஃபோல்டு 7 மற்றும் கேலக்ஸி Z ஃபிளிப் 7 கருவிகளில் ஏற்கெனவே இந்த வசதி உள்ளதால், ட்ரைஃபோல்டிலும் இந்த திறன் இருப்பது ஆச்சரியமில்லை.
அக்டோபர் 2025-இல் வரையறுக்கப்பட்ட அளவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கருவி, தொழில்நுட்ப ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் புதுமைகளை விரும்புவோரை இலக்காகக் கொண்டது. உலகளாவிய வெளியீடு அடுத்த ஆண்டு நடக்கக்கூடும்.
இந்த நிகழ்வில் XR காதணிபாடிகள், செயற்கை நுண்ணறிவு கண்ணாடிகள், ஆகியவையும் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த அதிநவீன மூன்று மடிப்பு தொழில்நுட்பம் திறன்பேசித் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
