இந்தியாவில் வருமான வரித்துறை ரூ.68.7 லட்சம் மதிப்பிலான வரிவஞ்சனையை கண்டுபிடித்துள்ளது. இந்த வழக்கில் முக்கியச் சாட்சியாக விளங்கியது கேலிப்ரி (Calibri) எழுத்துரு.

வழக்கின் விவரம்:
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் தனது சொத்தை ரூ.1.4 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். மூலதன ஆதாய வரியைக் குறைக்க 2002 முதல் 2008 வரையிலான மேம்பாட்டுச் செலவு கணக்குகளைச் சமர்ப்பித்தார். இந்தப் பற்றுச்சீட்டுகளில் ரூ.7.68 லட்சம் செலவு காட்டும் குறிப்பிட்ட தேதியிலான பற்றுச்சீட்டு ஒன்று வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்த்தது. வருமானவரித்துறை வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு கருவிகள், எழுத்துரு தடயவியல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
எழுத்துரு பகுப்பாய்வில் திருப்பம்:
செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்திய தடயவியல் பகுப்பாய்வில், ஆவணத்தின் உரை ‘கேலிப்ரி (பாடி)’ எழுத்துருவில் இருப்பது தெரியவந்தது. ஆனால் கேலிப்ரி எழுத்துரு 2002-04 இடையே வடிவமைக்கப்பட்டாலும், 2006-ல்தான் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது. 2007-ல் மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸின் இயல்புநிலை எழுத்துருவாக மாறியது.
பற்றுச்சீட்டு வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்ட 2002-ல் கேலிப்ரி எழுத்துரு இல்லாததால், ஆவணம் போலியானது என அதிகாரிகள் உறுதிசெய்தனர். இந்த எழுத்துரு சாட்சியம் வழக்கின் திருப்புமுனையாக அமைந்தது.
வழக்கின் முடிவு: வரி செலுத்துபவர் இந்த நகல்கள் தனது மறைந்த தந்தையின் பழைய கோப்பில் கிடைத்ததாகவும், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடியாது என்றும் ஒப்புக்கொண்டார். பின்னர் தனது கோரிக்கையை வாபஸ் பெற்று, திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பித்து, சரியான மூலதன ஆதாயத்தின் அடிப்படையில் வரி செலுத்தியுள்ளார்.
எண்ணிமத் தடயவியல், எழுத்துரு பகுப்பாய்வு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வரி அமலாக்கத்தில் எவ்வாறு புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்த வழக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
