தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தக் காலத்துக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த ணை, லை எழுத்துகள் இன்றும் சில சமயங்களில் எடுத்தாளப்படுகின்றன. அதை எப்படிக் கணினிச் செயலிகளில் கொண்டு வரலாம் என்பதை விளக்கி, செல்லினம், முரசு அஞ்சல் செயலிகளின் வடிவமைப்பாளர், நிறுவனர் முத்து நெடுமாறன் தன் இணையப் பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

1978ஆம் ஆண்டு தமிழக அரசு பயன்படுத்த வேண்டிய தற்கால வடிவங்கள் குறித்து ஓர் அரசாணையை வெளியிட்டது. தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளும் இம்மாற்றங்களை ஏற்றுக்கொண்டன. கல்வி, அரசு முதலிய துறைகளில் சீர்திருத்த வடிவங்கள் அலுவல் முறையான எழுத்து வடிவமாக மாறிய போதிலும், முந்தைய வடிவங்கள் முற்றிலும் மறைந்துவிடவில்லை — பழைய வெளியீடுகள், சமய நூல்கள், பெயர்ப் பலகைகள், எழுத்தழகுக் கலைஞர்களின் வரைபடங்கள், வடிவமைப்பாளர்களின் படைப்புகள் போன்றவற்றில் அவை தொடர்ந்து இடம்பெற்று வந்தன – சில இடங்களில் இன்னும் இடம்பெற்று வருகின்றன.
இவற்றைப் பேணிக்காக்க அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. முந்தைய உயிர்மெய் வடிவங்களைப் பற்றி எழுத வேண்டியத் தேவை ஏற்படும்போது — “இந்த வடிவங்கள் முன்பு இவ்வாறு எழுதப்பட்டன” என்று சொல்லி — முந்தைய வடிவங்களை அதே வரியில் காட்ட இயலவேண்டும். சில பத்தாண்டுகளுக்கு முன் வரை பயன்பாட்டில் இருந்த வடிவங்களை ஒரே வரியில் காட்ட இயலாத எழுத்து வரலாற்றுப் பேச்சு முழுமையற்றதாகிவிடும்.
இத்தகவல்களைக் குறிப்பிட்டு, “நான் வடிவமைக்கும் எல்லாத் தமிழ் எழுத்துருக்களிலும் முந்தைய உயிர்மெய் வடிவங்களைச் சேர்த்து வருகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். பல்வேறு செயலிகள் எப்படி இந்தப் பழைய எழுத்து வரிவடிவங்களைக் கொண்டுவரலாம் என்பதை விளக்கும் காணொளியும் இணைத்துள்ளார்.
முத்து நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரையை அவருடைய வலைத்தளத்தில் முழுதாக வாசிக்கலாம்.
