இன்று நாம் தங்கு தடையின்றி புழங்கும் தமிழ் எழுத்துகள் இன்றைய வடிவிலேயே தோன்றியவை அல்ல. சித்திர எழுத்துகளாகத் தோன்றி இன்றைய நிலைக்கு வந்துள்ளன. இன்று நாம் பாடநூல்களின் வழியாகக் கற்றுக்கொள்ளும் தமிழைக் கொண்டு கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை வாசிக்க முடியாது.. இதற்கெனத் தனியாகப் பயிற்சி எடுக்கவேண்டும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அவ்வப்போது தமிழி கற்பதற்கான பயிற்சிகளை நடத்துகிறது. அண்மையில் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

‘கல்வெட்டு எழுத்துகளை அனைவராலும் வாசித்துவிட முடியாது. ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் தோன்றியவை. அந்தந்தக் காலக்கட்டத்தில் தோன்றிய எழுத்துகளை முறையாகக் கற்றால் மட்டுமே தமிழ் மொழியின் எழுத்துருக்களை அறிதல், வாசித்தல், புரிந்து கொள்ளுதல் எனும் கற்றல் அனுபவத்தைப் பெற இயலும். கல்வெட்டு வாசிப்பைக் கற்றுக்கொண்டால் தமிழின் தொன்மை, வளர்ச்சி, தமிழரின் வாழ்வியல், பண்பாடு போன்ற கூறுகளை உணர்ந்துகொள்ள முடியும். தமிழரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.’
கற்கும் ஆர்வம் இருந்தால் போதும். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் கற்பிக்க முன் வருகிறது. இந்நிறுவனத்தின் மொழிகள் பள்ளி, மொழிக் கல்வியியல் புலம் மற்றும் மொழித் தொழில்நுட்பப் புலம் சேர்ந்து ‘தமிழ் பிராமி கற்பித்தல்’ என்ற பயிலரங்கை நடத்துகின்றனர்.
இப்பயிலரங்கம் ஜூன் 30-லிருந்து ஜூலை 6 வரை ஏழு நாள்கள் (30-06-2026 முதல் 06-07-2026 வரை) நடைபெற உள்ளது. இணைய வழியில் நடைபெறும் இப்பயிற்சியைத் துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்றுவிக்க உள்ளார்கள். பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணிவரை நடைபெற உள்ளது. இதில் 250 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். சான்றிதழும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் 25-06-2026. சில நேரங்களில் அறிவிப்பு செய்தியை நாம் கடைசி நேரத்தில் கண்ணுற்று விண்ணப்பிக்கும் வாய்ப்பைத் தவறவிடுவதுண்டு. எனினும் இது தமிழி கற்றுத்தரும் ஒன்பதாவது பயிலரங்கம் . தொடர்ந்து மேலும் பல பயிலரங்க வாய்ப்புகள் வரும். எனவே இப்பயிலரங்கில் சேர ஆர்வமுள்ளோர் இந்நிறுவனத்தின் முகநூல் பக்கததைப் பின்தொடர்வதன் வழியாக அடுத்த அறிவிப்பினைக் குறித்த நேரத்தில் பார்த்து பலனடையலாம்.
அதுவரைக்கும் இருக்கும் இடத்தில் இருந்து திறன்பேசி வழியாகவே தமிழி எழுதிப் பழகலாம். முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவைப்பாளர், நிறுவனர் முத்து நெடுமாறன் அண்மையில் சொல்வளம் செயலியின் முன்னோட்டப் பதிப்பினை வெளியிட்டுள்ளார். சொல்வளம் 3 செயலியில் தமிழி வரிவடிவத்தை விளையாட்டைப் போல எளிதாகக் கற்றுக் கொள்ள இயலும்.

- ஸ்ரீதேவி கண்ணன்
தொடர்புடைய இணைப்புகள் :
தமிழாய்வு நிறுவனத்தின் முகநூல் பக்கம்
தமிழி பயிலரங்க விவரங்கள்
தமிழி பயிலரங்க விண்ணப்பப் படிவம்
சொல்வளம் பற்றிய அறிவிப்பு
சொல்வளம் முன்னோட்டப் பதிப்பு பதிவிறக்கம் செய்யும் இணைப்பு
